July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“பேரணியில் கலந்து கொண்டவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைக்க முடியும்”: அமைச்சர் வீரசேகர

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பேரணியில் கலந்துகொண்டவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைக்க முடியும் என தெரிவித்துள்ள அவர் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இவ்வாறான போராட்டங்கள் குறித்து தமக்கு புலனாய்வு தகவல்கள் கிடைத்துவிடுகின்றன அதற்கமைய தாம் நீதிமன்ற உத்தரவைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் போராட்டக்காரர்களைக் கைதுசெய்வதையும் அவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகிப்பதையும் சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் விரும்புகின்றார்கள் என மேலும் கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே, நாங்கள் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொண்டோம் ஆனால் தற்போது நீதிமன்ற உத்தரவு உள்ளது, எங்களிடம் அவர்களின் படங்கள் மற்றும் வாகனங்களின் படங்கள் உள்ளதால் இந்த தனிநபர்களுக்கு எதிராக நாங்கள் சட்டத்தின் அடிப்படையில் செயற்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக யாரும் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் சரத்வீரசேகர அடுத்த சில நாட்களில் வழக்குகளைத் தாக்கல் செய்யப்போவதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, சுமந்திரனிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாக குறிப்பிட்ட அவர் நேற்று அவருக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பைத் தாம் விலக்கிக்கொண்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.