May 15, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை: தடையுத்தரவை மீறியதாக சாணக்கியன் உட்பட 7 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை

பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், த. கலையரசன் உள்ளிட்ட எழுவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 திகதி கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொள்வதைத் தடுக்கக் கோரி, கல்முனை பொலிஸ் நிலையத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 29 பேருக்கு எதிராக கல்முனை நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.

குறித்த பேரணியில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி கலந்துகொண்டதாகக் குற்றம்சாட்டி, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் கல்முனை பொலிஸார் கடந்த 5 ஆம் திகதி வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை கல்முனை நீதவான் ஐ.என் றிஸ்வான் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், கோ. கருணாகரம், த. கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேந்திரன், சீ. யோகேஸ்வரன் மாணவர் மீட்பு பேரவையின் தலைவர் செ. கணேசானந்தன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் துணைச் செயலாளர் அ. நிதான்சன் ஆகியோருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கல்முனை நீதவான் அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.