May 10, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் 2022: புதிய அணியை வாங்க மான்செஸ்டர் யுனைடெட் கழகம் ஆர்வம்!

2022 ஐ.பி.எல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இணையவுள்ள நிலையில், அதில் ஒரு அணியை வாங்க மான்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது 8 அணிகள் விளையாடிவரும் நிலையில், 2022 ஐ.பி.எல் தொடரில் மேலும் இரண்டு புதிய அணிகளை இணைத்துக் கொள்ள முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஆகஸ்ட் மாத இறுதியில் பிசிசிஐ வெளியிட்டது.

இதன்படி, புதிய ஐ.பி.எல் அணிக்கான ஏல விண்ணப்பத்தை ஒக்டோபர் 5 ஆம் திகதி பிசிசிஐ வெளியிட்டது. இதில் விதிமுறைகளுக்கு ஏற்ப தகுதியுள்ள நிறுவனங்களால் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள முடியும் என பிசிசிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து 2022 முதல் ஐ.பி.எல் தொடரில் 10 அணிகள் விளையாடவுள்ளன. இரு புதிய அணிகளால் பிசிசிஐக்கு  கூடுதலாக ரூ. 7000 கோடி ரூபா வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் உள்ள அகமதாபாத் நகரின் பெயரில் ஓர் அணி உருவாகும் என அறியப்படுகிறது.

இந்த நிலையில், ஏல விண்ணப்பத்தை பெறுவதற்கான காலக்கெடுவை ஒக்டோபர் 20 ஆம் திகதி வரை பிசிசிஐ நீட்டித்தது. பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்ததால் இம்முடிவை பிசிசிஐ எடுத்தது.

இதேவேளை, ஐரோப்பியாவின் பிரபல கால்பந்து கழகமான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்களான அமெரிக்காவை சேர்ந்த கிளேசர் குடும்பத்தினர், ஐ.பி.எல் தொடரில் இணையவுள்ள புதிய அணியொன்றை வாங்க ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐ.பி.எல் ஏல விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட கிளேசர் குடும்பத்தினர், புதிய அணிகளுக்கான ஏலத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, ஐ.பி.எல் தொடரில் இணையவுள்ள இரண்டு புதிய அணிகள் குறித்த விபரங்களை ஒக்டோபர் 25 ஆம் திகதி டுபாயில் பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.