July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை அகதிகளின் குடியுரிமை விவகாரத்தில் உணர்வுபூர்வமாக முடிவெடுக்க முடியாது’: மத்திய அரசு

(FilePhoto)

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் விடயத்தில் உணர்வு பூர்வமாக முடிவெடுக்க முடியாது என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்குவது தொடர்பான வழக்கு இன்று (23) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து முடிவெடுக்குமாறு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில்  ”இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், எனவும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விடயத்தில் உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்க முடியாது, சட்டத்திற்குட்பட்டே முடிவெடுக்க முடியும்” என இந்திய அரசு வாதம் செய்துள்ளது.

அதற்கு முன்னதாக தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி கடந்த 2009 ஆம் ஆண்டு திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பலர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் ,கடந்த 2019-ம் ஆண்டு மனுதாரர்கள் அனைவரும் குடியுரிமை கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக விண்ணப்பிக்குமாறும், அந்த விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் மத்திய அரசுக்கு தாமதம் இன்றி அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து இந்திய அரசு தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு மற்றும் எதிர் மனுதாரராக இருக்கும் இலங்கை அகதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி துரைச்சாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தமிழக அரசு மற்றும் எதிர் மனுதாரராக இருக்கும் இலங்கை அகதிகளுக்கு அனுப்பிய நோட்டீஸ் சரியாக சென்று சேரவில்லை என தெரிவித்துள்ளனர்.

ஆகவே தமிழக அரசு மற்றும் எதிர் மனுதாரராக இருக்கும் இலங்கை அகதிகளுக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடக் கூறி வழக்கை நீதிபதிகள் 3 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.