
இந்தியாவின் கொரோனா தீவிரமாகியுள்ள நிலையில், பல மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை இந்தியா ஜனவரி 16 ஆம் திகதி ஆரம்பித்தது.
இதற்கமைய நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி கட்டம் கட்டமாக போடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் சீரம், பயோடெக் நிறுவனங்களில் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதுடன். சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிப்புக்கும் மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்தியா தமக்கு தேவையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதுடன் ஏனைய நாடுகளுக்கும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகின்றது.
இந்நிலையில், இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நிலவியுள்ள நிலையில், இந்தியா ஏனைய நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன.
தமிழகத்திலும் 3600 அரசு முகாம்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகள் உள்பட 4000 க்கும் மேற்பட்ட முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், அங்கும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு ஊசி போடப்படுகிறது. தமிழ்நாட்டில் இப்போது கொரோனா 2-வது அலை தீவிரமாகி இருப்பதால் மக்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனினும் சென்னையில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றும் தேவைக்கு அதிகமாக தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில வைத்தியசாலைகளில் இரு தடுப்பூசிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதையடுத்து மக்கள் திருப்பி அனுப்பப்பட்டாக விசனம் வெளியிட்டுள்ளனர்.
திருச்சி அரசு வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக காத்திருந்தவர்களுக்கு தடுப்பூசி இல்லை என்று வைத்தியசாலை நிர்வாகம் கூறியதையடுத்து அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழ் நாட்டின் பல அரச வைத்தியசாலைகளில் மக்கள் திருப்பி அனுப்பப்படுவதுடன், சில வரையறைக்கு உட்பட்டு தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.
இதன் காரணமாக தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஆனால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி தாராளமாகப் போடப்படுவதாகவும் உரிய பணம் கொடுத்து சிலர் தடுப்பூசி போடுகின்றனர் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு மிகப்பெரிய உச்சம். இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளான 1,501 பேர் உயிரிழந்தனர். அத்தோடு தொற்றுக்குள்ளான மேலும் 1,38,423 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.