May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது.

நாளாந்தம் 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டு வருவதுடன், ஆயிரக்கணக்கில் உயிரிழந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் , மன்மோகன் சிங்கிற்கு உடல்நலக்குறை ஏற்பட்டதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது.

அங்கு சிறப்பு மருத்துவ குழு மன்மோகன் சிங்கிற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.அவர் நல்ல உடல் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதேவேளை பிரதமர் மோடிக்கு ,மன்மோகன் சிங் நேற்று கடிதம் எழுதி, 5 முக்கிய விடயங்கள் தொடர்பாக  குறிப்பிட்டிருந்தார்.

தடுப்பூசி போடுதலை விரைவுப்படுத்த வேண்டும், தடுப்பூசி போடும் வயதினரைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.