July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் – பாகிஸ்தான் பிரதமர் கடும் கண்டனம்!

பாகிஸ்தானில் தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணிபுரிந்த இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளமை உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

“சியால்கோட்டில் இலங்கை முகாமையாளர் ஒருவரை உயிருடன் எரிக்கப்பட்ட இன்றைய நாள் பாகிஸ்தானுக்கு அவமானம் நிறைந்த நாள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

“விசாரணைகளை நான் மேற்பார்வை செய்து வருகிறேன், அதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் மூலம் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். கைதுகள் செய்யப்படுகின்றன” என அவர் மேலும் கூறியுள்ளார்.

 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியல்கோட் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய பிரியந்த குமார என்ற நபர் இன்று தாக்கப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அத்தோடு இது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி மக்களை மிகுந்த கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் இவரை சித்திரவதை செய்து கொன்றதாக இளைஞர் ஒருவர் ஒப்புக்கொள்ளும் வகையிலான காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இது குறித்து முழுமையான விசாரணையை நடத்தி வருவதாக பஞ்சாப் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

“சம்பவத்தின் ஒவ்வொரு அம்சமும் விசாரிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் அரசு உரிய விசாரணைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.