May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் உடல் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படும்!

பாகிஸ்தானில் சியால்கோட் பகுதியில் கலகக் கும்பலால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட இலங்கையரான நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் நாளைய தினம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஊடாக அரச செலவில் சடலம் இலங்கைக்கு எடுத்து வரப்படும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை பிரியந்த குமாரவின் மரணம் தொடர்பிலான விசாரணை அறிக்கை ஒன்றை வழங்குமாறு இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சிடம் கோரியுள்ளது.

இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் பாகிஸ்தான் அதிகாரிகள் மற்றும் இறந்தவரின் தொழில் தருனருடன் வெளிநாட்டு அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் 3 ஆம் திகதி சியால்கோட் பகுதியில் கலகக் கும்பலால் பிரியந்த குமார எரித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்தை பல்வேறு நாடுகள் கண்டித்துள்ள நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இது தொடர்பில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி சம்பவம் தொடர்பில் நூறு பேர் வரையிலான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.