July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழ்க் கட்சிகளின் உரையாடலில் தமிழரசுக் கட்சியும் இருக்க வேண்டுமென நானும், ஹக்கீமும் வலியுறுத்தினோம்’

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சியும் இருந்திருக்க வேண்டும் என தானும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் வலியுறுத்தியதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

யாழில் சனிக்கிழமையன்று நடைபெற்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளின் உரையாடலில் கலந்துக்கொண்ட எல்லா கட்சிகளும், தமிழரசுக் கட்சியும் இருக்க வேண்டும் என்பதை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டுமன்றி, பொது நோக்கில் இணைந்து செயற்பட விரும்பும் எல்லா தமிழ், முஸ்லிம் கட்சிகளும் ஒரு தளத்தில் அமர்ந்து பேசுவது ஆரோக்கியமானது என மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரதானமான கட்சி என்பதால், முதலில் அந்தக் கட்சி உள்வாங்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இவ்வாறான கலந்துரையாடல்கள் தொடர வேண்டும் எனவும் நான் விரும்புகிறேன்.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த உரையாடல் ஏற்பாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் அழைப்பின் பேரிலேயே நாம் கலந்துக்கொண்டோம். அடைக்கலநாதன் எம்.பியினதும், அவரது கட்சியினதும் இந்த முன்முயற்சி பாராட்டுக்குரியது”

என்று மனோ எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய உரையாடல் தமிழ் கட்சிகள் மத்தியில் ஐக்கியத்தை மென்மேலும் வலுப்படுத்த வேண்டும். அதைவிடுத்து, இதன்மூலம் பிளவுகள் அதிகரிக்குமானால், இத்தகைய முயற்சிகளில் பங்குபற்றி, காலவிரயம் செய்ய தமிழ் முற்போக்குக் கூட்டணியாக விரும்ப மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.