May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் ஒன்று கூடும் தமிழ், முஸ்லிம் கட்சிகள்

File Photo

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

டெலோவின் ஏற்பாட்டில் நடைபெறும், இந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ரொலோவின் தலைவர் செல்வம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியன் தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் இக்கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

இதற்கு முன்னர் கடந்த நவம்பர் முதல் வாரத்தில் யாழ். திண்ணையில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் கூடி கலந்துரையாடியிருந்தன.

இதன் இரண்டாவது கூட்டம் இன்று பிற்பகல் கொழும்பில் நடத்தப்படவுள்ளது.
.
இக்கூட்டத்தில் தமிழ் பேசும் தேசிய இனங்கள் தொடர்பான அபிலாஷைகள் அடங்கிய பொது யோசனைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை ஆராய்ந்து தயாரிக்க எதிர்பார்த்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்சிகள் தயாரிக்கும் ஏற்புடைமை உள்ள இந்த ஆவணம், இலங்கை அரசு, இந்திய அரசு உட்பட தேசிய, சர்வதேச தரப்புகளிடம் முன்வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.