
நாடு முழுவதும் 16 – 17 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நாளை (22) முதல் பைசர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆரம்பிக்க உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இதன்படி, 16 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தடுப்பூசி திட்டத்திற்கான அட்டவணையை உருவாக்குவதன் மூலம் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட சுகாதார பிரிவுகளின் பணிப்பாளர்கள் மற்றும் கல்வி வலயப் பணிப்பாளர்கள் மேற்கொள்வார்கள் என அவர் மேலும் கூறினார்.
அந்தந்த பாடசாலைகளுக்கு தேவையான எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் ஏற்கனவே அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.
18 – 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தும் தடுப்பூசி இயக்கம் இன்று (21) முதல் நாடு முழுவதும் அனைத்து பாடசாலைகளிலும் தொடங்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு ஒரு டோஸ் பைசர் தடுப்பூசி வழங்குவதற்கு அண்மையில் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை வழங்கியிருந்தனர்.