July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

75 சதவீதமானோர் உயர்தர வகுப்புக்குச் செல்லத் தகுதி

2020 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 75 சதவீதமானோர் உயர்தர வகுப்புக்குச் செல்வதற்கு தகுதி பெற்றுள்ளனர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகின.

அழகியல் பாடநெறிக்கான செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெறாததால், அந்த விடயதானம் இன்றியே பெறுபேறு வெளியிடப்பட்டது.

இதன்படி மேற்படி செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் இன்றி 236,053 பேர் உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 53 மாணவர்கள் உயர்தர வகுப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பாடசாலை மற்றும் தனிப்பட்ட  பரீட்சார்த்திகளை  உள்ளடக்கியதாக குறித்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அழகியல் பாடங்களின் முடிவுகளும் வெளியிடப்படும் போது, இந்த எண்ணிக்கையில் மேலும் மாற்றங்கள் இடம்பெறலாம் என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பாடசாலைகள் ஆரம்பமானதும், செயன்முறைப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, அதன் பெறுபேறுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.