May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக முதல்வருக்கு கூட்டமைப்பு எம்பி அடைக்கலநாதனிடம் இருந்து அவசர கடிதம்

தமிழகத்தில் உள்ள அகதி முகாம்கள் மற்றும் சிறைகளில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழக முதலர்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

முகாம்களிலும், சிறைகளிலும் இருப்பவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுக்குமாறு செல்வம் அடைக்கலநாதன், தமிழக முதல்வரிடம் அந்தக் கடிதத்தின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று நிலைமையில் முகாம்களில் வாழ்பவர்கள் பெரும் கஷ்டங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும், அத்துடன் அந்த குடும்பங்களை சேர்ந்த சிலர் திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, இவர்கள் தங்களது குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்து தங்கள் வாழ்க்கையினை தொடரும் எதிர்பார்ப்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே முகாம்களில் வாழும் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டும், திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் சரியான தீர்மானத்தை எடுப்பீர்கள் என நம்புகின்றேன் என்று செல்வம் அடைக்கலநாதன், தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.