May 10, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆட்பதிவு திணைக்களத்திற்கு மறு அறிவித்தல் வரை பூட்டு; விசேட தொடர்பு இலக்கம் அறிமுகம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிராந்திய அலுவலகங்களினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் மீள அறிவிக்கும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எதிர்வரும் நாட்களில், முன்பதிவு செய்து கொண்ட விண்ணப்பதாரர்களுக்காக தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தபால் மூலம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

தேசிய அடையாள அட்டைகளுக்காக இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், தமது விண்ணப்பங்களை பிராந்திய அலுவலகங்களில் வழங்க முடியுமென அவர் தெரிவித்தார்.

அத்தோடு, தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமது பகுதிக்கான கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் பரீட்சைகள் மற்றும் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக தேசிய அடையாள அட்டையை பெற வேண்டுமென்றால் பிரதான அலுவலகத்தின் 0115 226 126 அல்லது 0115 226 100 என்ற தொலைபேசி எண்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்வதற்காக, தென் மாகாணத்திற்கு 0912 228 348 என்ற தொலைபேசி இலக்கமும், வடமேல் மாகாணத்திற்கு 0372 224 337 என்ற தொலைபேசி இலக்கமும், கிழக்கு மாகாணத்திற்கு 0652 229 449 என்ற தொலைபேசி இலக்கமும், வட மாகாணத்திற்கு 0242 227 201 என்ற தொலைபேசி இலக்கமும் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளன.