File Photo
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பயணித்த வாகனம் இன்று அதிகாலை கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பான வழக்கு நடவடிக்கைகளுக்காக கல்முனை நோக்கி சுமந்திரன் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கடும் மழையுடனான காலநிலையால் சுமந்திரன் பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேக வீதியின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதுடன் இதனால் வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
எனினும் தனக்கு எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை என்று சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தை தொடர்ந்து வேறு வாகனமொன்றில் சுமந்திரன் கல்முனை நோக்கி பயணித்துள்ளார்.