May 15, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மாகாணசபை முறையை ஒழிப்பதற்கு நாங்கள் இடம் கொடுக்கமாட்டோம்’; சுமந்திரன்

மாகாணசபை முறையை ஒழிப்பதற்கு நாங்கள் இடம் கொடுக்கமாட்டோம்.ஆனால் வெறுமனே இருக்கின்ற மாகாணசபை முறை எங்கள் பிரச்சினைக்கு தீர்வு என்றும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். மாகாண சபை முறைமை இருக்க வேண்டும். அது முழு அதிகாரங்களை பெற்றதாக ஒரு சமஸ்டி கட்டமைப்பில் வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு ஆட்சியாக மலர வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ,அல்வாய் கிழக்கு, இலகடியில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற புத்தாண்டு பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து பேசிய சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது;

நாட்டிலே பல விதமான பிரச்சினைகள் இருக்கின்றன. பொருளாதார பிரச்சினை இப்போது முக்கியமாக மேலோங்கி நிற்கின்ற இந்த சூழ்நிலையிலேயே இப்புத்தாண்டை கொண்டாடுவதற்கு வழியில்லாமல் இருப்பவர்களுக்காக நாங்கள் விசேடமாக அவர்களை நினைவு கூருகின்றோம்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த புத்தாண்டிலாவது ஒரு விடிவு ஏற்பட வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருக்கிறார்கள்.அந்த இலக்கை அடையவேண்டுமென நாங்கள் பிரார்த்திக்கின்றோம். பிரார்த்திப்பது மட்டுமல்ல அதற்காக தொடர்ந்து எங்களது பிரயாசையையும் நாங்கள் கொடுத்துக் கொண்டேயிருப்போம்.

எங்களுடைய முயற்சி ஒருபோதும் கைவிடப்படமாட்டாது. ஆகையினாலே அனைத்து மக்களுக்கும் நாங்கள் வாழ்த்து சொல்லுகின்ற அதே வேளையில், விசேடமாக வடக்கு ,கிழக்கு தமிழ் மக்களுடைய அரசியல் விடுதலையை நாங்கள் வேண்டி அதற்காக உழைப்போம் என்று உறுதி கூறுகின்றோம்.

அரசாங்கத்துக்குள்ளே மாகாணசபைத் தேர்தல் நடத்துவது பற்றி பெரியதொரு இழுபறி நடந்து கொண்டிருக்கிறது என்று எங்களுக்கு தெரிகிறது. அரசாங்கம் மாகாண சபைகளையும் கைப்பற்ற வேண்டும் என்று சிந்திக்கிறார்கள். ஆனால் கடும்போக்குவாத பின்னணியை கொண்ட பலர் குறிப்பாக இந்த அரசாங்கத்தை கொண்டு வந்தவர்கள் விசேடமாக ஜனாதிபதியின் வெற்றிக்காக உழைத்த இனவாத சிந்தனை உள்ள கடும்போக்குவாதிகள் மாகாணசபை முறை அகற்றப்பட வேண்டும் என்று தங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துவருகிறார்கள்.

எங்களைப் பொறுத்தவரையில் மாகாணசபை முறையை ஒழிப்பதற்கு நாங்கள் இடம் கொடுக்கமாட்டோம். ஆனால் வெறுமனே இருக்கின்ற மாகாணசபை முறையோடு நாங்கள் எங்கள் பிரச்சினைக்கு தீர்வு என்றும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். மாகாண சபை முறைமை இருக்க வேண்டும். ஆனால் அது முழு அதிகாரங்களை பெற்றதாக ஒரு சமஷ்டி கட்டமைப்பில் வடக்கு, கிழக்கு இணைந்ததாக ஒரு ஆட்சியாக மலர வேண்டும். அதற்கான எங்களுடைய யோசனைகளை இந்த அரசாங்கம் நியமித்துள்ள அரசியலமைப்பு வரைபு குழுவிடம் முன்வைத்துள்ளோம்.ஆகையினாலே எங்களுடைய முயற்சி இது தொடர்பாக தொடர்ந்து நடைபெறும்.மாகாணசபைத் தேர்தல் மிக விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.

மேலும் ,என்னுடைய பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியாது. அது பாதுகாப்பு தரப்பினருக்கு தான் தெரியும். இது அவர்களே நீதிமன்றத்துக்கு முன்பாக பல அறிக்கைகளை முன்வைத்து சொன்ன செய்தி.

பல ஆயுதங்களை கண்டெடுத்து 2019 ஆம் ஆண்டிலிருந்து ஒரு நீதிமன்ற வழக்கில் இந்த 15 பேரையும் உட்படுத்தி என்னை கொலை செய்த முயற்சித்தார்கள் என்றும், வேறு பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தடுப்புக் காவலில் இருந்த 11 பேருக்கு எதிராக சாட்சிகள் இல்லை என்று சட்டமா அதிபர் சொன்னதாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

அதனுடைய பின்னணி எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் இதேபோல இன்னும் ஓரிரு வழக்குகள் இருப்பதாக அறிகிறேன்.
ஆகவே அடுத்தடுத்ததாக என்ன நடக்கும் என்று சொல்ல தெரியாது. இதற்கு முழுப்பொறுப்பும் சரத் வீரசேகராவும், ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும்,அரசாங்கமும்தான் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.