February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா அபாய வலயங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை!

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள ஆபத்தான வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்ட வரைபடங்களை தொற்று நோயியல் பிரிவு வெளியிட வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் ஊடாக மக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள முடியும் எனவும் ஆபத்து அதிகமான பிரதேசங்களுக்கு  செல்லும் போது மக்கள் மேலும் அவதானமாக செயற்பட கூடியதாக இருக்கும் எனவும் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே கூறினார்.

நாட்டை முடக்குவதற்கான திட்டம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான தனிமைப்படுத்தல் விதிமுறைகளை அமுல்படுத்துவது அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் இதுவரை கொரோனா பரவலில் தீவிரமான அதிகரிப்பு பதிவாகவில்லை.எனினும் நிலைமையைக் குறைத்து மதிப்பிட முடியாது.மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே  தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினால் வைரஸ் பரவுவதை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றார்.

இந்த நிலையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து தொற்றாளர்களை இனங்காண்பது முக்கியமானது என்றார்.

அத்தோடு அவசர சிகிச்சை பிரிவுகள் கொரோனா நோயாளர்களுக்காகத் தயார் நிலையில் வைக்கப்படவேண்டும் என குறிப்பிட்ட அவர். ஏனைய நோயாளர்களை கொரோனா நோயாளர்களுடன் இணைத்து சிகிச்சை வழங்க முடியாது என கூறினார்.

அதேநேரம், அவசர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகளை அதிகரிக்கவும் தொற்றுநோயியல் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர் பிரசாத் கொலம்பகே குறிப்பிட்டார்.