July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் கறுப்புப்பண பொருளாதாரம் உருவாகும் சாத்தியம்’

இலங்கையின் பொருளாதாரம் கறுப்புப்பண பொருளாதாரமாக கருதப்பட வாய்ப்புள்ளதாக முன்னிலை சோஷலிசக் கட்சி தலைவர் புபுது ஜாகொட எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னிலை சோஷலிச கட்சியினரினால் கொழும்பு – புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னால் அமைதிவழி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் கறுப்பு பணச் சலவை வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களின் தளமாக இது தோற்றம் பெறும். இதனால் இலங்கையின் பொருளாதாரம் கறுப்பு பொருளாதாரமாகவே கருதப்படும் என புபுது ஜாகொட குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவுக்கு வழங்குவதன் ஊடாக சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்கும். இதனால் நாட்டு மக்களின் தொழில் சார் உரிமைகள் கை நழுவும் வாய்ப்பு உள்ளது.

அத்தோடு, துறைமுக நகர சட்டமூலத்தின் ஊடாக இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் காணப்படும் அதிகார போட்டி மேலும் வலுவடைய செய்வதுடன் இது நாட்டு மக்களையும் பாதிக்கும் என்றார்.