
இலங்கையின் ஆட்சியாளர்கள் நாட்டை ஒரு தேசமாக வைத்திருக்க முயன்றாலும், மனதளவில் இரண்டு நாடுகள் உள்ளதாகவே உணரச் செய்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமைக்காக கிளிநொச்சி பொலிசாரினால் வாக்குமூலம் பெறப்பட்ட போது பொலிசாரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சிறீதரன் இவ்வாறு தெரிவித்தார்.
“இந்த நாட்டிலே தமிழர்களின் காணிகள் முப்படைகளால் வன்பறிப்பு செய்யப்பட்டிருக்கிறது. தொல்லியல் திணைக்களம் என்ற பெயரிலும் வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் போன்றவை ஊடாகவும் காணிகள் சுவீகரிப்பு செய்யப்படுகிறது.
இலங்கையில் பௌத்த விகாரைக்காக காணிகள் உறுதியோடு வழங்கப்படுகிறது. ஆலயங்களுக்கு குத்தகை முறையிலே தான் வழங்கப்படுகிறது. முப்படையினரைப் பயன்படுத்தி ஒரு தேசமாக இலங்கையை ஆட்சியாளர்கள் வைத்திருக்கிறார்களே தவிர, மனதளவில் இரண்டு நாடாகவே இருக்கிறது. அந்த வகையில் தான் அரசும் செயற்படுகிறது .
இந்தப் போராட்டம் கூட இந்த நாட்டிலே தமிழ் பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவே இடம்பெற்றது. குறித்த போராட்டமானது வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்திற்கான அழைப்பு எமக்கு எவராலும் தனித்து விடப்படவில்லை. நாம் பத்திரிகையில் வெளியான செய்திகளை அடிப்படையாக வைத்தே இந்தப் பேரணியில் கலந்து கொண்டோம்.
இந்த ஆர்ப்பாட்டத்தினை நாம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையிலோ இலங்கையின் இறையாண்மைக்கு எதிராகவோ ஆயுதவழியிலோ நடத்தவில்லை.
அரச இயந்திரங்களால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கும் அரச பயங்கரவாதத்திற்கும் எதிராகவே அமைதிவழியில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் வராத கொரோனா தமிழர்கள் நடத்தும் போராட்டத்திலா வரும்” எனவும் சிறீதரன் எம்.பி. தனது வாக்குமூலத்தில் கேள்வி எழுப்பினார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் சிறீதரனிடம் பொலிசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.