May 16, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“பேரணியில் பங்கேற்றவர்களை தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்ன என்பதை புரிந்துகொள்ளுங்கள்”

போராட்டத்தில் பங்கேற்றவர்களை தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்ன என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பொத்துவில்  முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தினை முன்னெடுத்தமை தொடர்பில் பொலிஸாரால் இன்று சாணக்கியனிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதன்போது ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையானது இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லையென்பதை உறுதிப்படுத்தும் செயற்பாடாகவுள்ளதாக  சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின்போது நீதிமன்ற கட்டளை மீறப்பட்டமை தொடர்பிலும் பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு, கொரோனா அச்சுறுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டன.

வல்வெட்டித்துறை, கிளிநொச்சி, மாங்குளம், வாழைச்சேனை, மூதூர், காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை  ஆகிய பகுதிகளைச்சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சாணக்கியனிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.