May 15, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் சுமந்திரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் பொலிஸ் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இன்று முற்பகல் கொழும்பிலுள்ள தனது இல்லத்திற்கு வந்த பொலிஸார் தன்னிடம் வாக்குமூலத்தை பதிவு செய்ததாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பாகவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் அந்தப் பேரணி நடத்தப்பட்டிருந்தது. இந்த பேரணியின் போது வடக்கு, கிழக்கில் பல பிரதேசங்களில் பொலிஸார் நீதிமன்றங்களின் ஊடாக தடையுத்தரவை பெற்றிருந்தனர்.
எனினும் திட்டமிட்டவாறு பேரணி பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் நடத்தப்பட்டது.

இந்நிலையில், அந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றனர். இதன்படி இன்று எம்.ஏ.சுமந்திரனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், இரா.சாணக்கியன், மனோ கணேசன் மற்றும் யாழ். மாநகர சபை மேயர் மணிவண்ணன் ஆகியோரிடம் ஏற்கனவே பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.