June 16, 2025 13:22:28

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை: தமிழ்- முஸ்லிம்களின் ஆதரவுடன் வவுனியாவில் இருந்து ஆரம்பம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மேற்கொள்ளப்படும் நீதிக்கான கவனயீர்ப்புப் பேரணியின் 4 ஆம் நாளான இன்று வவுனியாவில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

வவுனியாவில் வசிக்கும் தமிழ், முஸ்லிம் மக்களின் முழுமையான ஆதரவுடன் பேரணி இன்று மன்னாரை நோக்கிப் புறப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், நில அபகரிப்பு, முஸ்லிம்களின் உடல்களை கட்டாய எரிப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் 1000 ரூபா சம்பளப் பிரச்சினை உட்பட அரச அடக்குமுறைகளைக் கண்டித்தும், நீதி கோரியும் இந்தத் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

நேற்று காலை திருகோணமலையில் ஆரம்பித்த பேரணி, தென்னமரவடி கொக்கிளாய் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தையும், அங்கிருந்து நெடுங்கேணி, புளியங்குளம் ஊடாக வவுனியா மாவட்டத்தையும் அடைந்திருந்தது.

இந்நிலையில், இன்று காலை வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பித்த போராட்டம், மணிக்கூட்டுகோபுர சந்தியை அடைந்து, அங்கிருந்து பசார் வீதி வழியாக ஹொறவப்பொத்தானை வீதியை அடைந்து, பண்டாரவன்னியன் சிலையடியில் முற்றுப்பெற்றது.

ஆர்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்ததுடன், இஸ்லாமிய மக்களும் தமது பேராதவரை வழங்கியிருந்தனர்.

வவுனியா பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஒன்றிணைந்திருந்த இஸ்லாமிய மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் பேரணியுடன் ஒன்றிணைந்து பண்டாரவன்னியன் சிலை வரை இணைந்து சென்றிருந்தனர்.

பின்னர், மதகுருக்களால் பண்டாரவன்னியன் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அங்கிருந்து நெளுக்குளம் சந்தி போராட்டத்தைத் தொடர்ந்து, மன்னார் நோக்கி குறித்த பேரணி பயணித்தது.

பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், சி.சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இரா. சாணக்கியன், செ.கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சீனிதம்பி யோகேஸ்வரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன், செ.மயூரன், ப.சத்தியலிங்கம் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.