July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மட்டக்களப்பில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

இலங்கை, மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டிகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.கே. பண்டார தெரிவித்தார்.

ஏறாவூர், செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதிகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே, குறித்த முச்சக்கர வண்டி சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

குறித்த போதைப்பொருள் வியாபாரியை தொடர்பு கொண்டு போதைப்பொருள் வாங்குவது போல நடித்து அவரை மட்டக்களப்பு திருகோணமலை வீதிக்கு வரவழைத்து மடக்கிப்பிடித்து கைது செய்ததுடன் அவரிடம் இருந்து போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதன்போது, 3 இலட்சம் பெறுமதியான 11 கிராம் 200 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பி.கே. பண்டார தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.