October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழகத்தில் கொரோனா அலையை எதிர்கொள்ள 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு’

(FilePhoto)

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கொரானோ நிவாரண நிதியாக இதுவரை 355 கோடி ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து,கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் திரவ மருத்துவ ஒக்ஸிஜனை வாங்குவதற்காகவும், மேலும் கொரோனா மூன்றாவது அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்காகவும் இந்த 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், வெளி மாநிலங்களிலிருந்து திரவ ஒக்ஸிஜனை ரயில் மூலமாக கொண்டு வருவதற்கு தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காக முதற் கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கட்டமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாள்தோறும் 1.6 இலட்சம் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டு வருவதை  கருத்தில் கொண்டு, ஆர்டி-பிசிஆர் கிட்-களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை வழங்கிடவும் தமிழக முதலமைச்சர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

அத்தோடு சிங்கப்பூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஒக்ஸிஜன் உருளைகள், ஒக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவ கருவிகளை வாங்குவதற்கு 41.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்கு 25 கோடி ரூபாயினையும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டுள்ளார்.

தற்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து கொரோனா நோய் சிகிச்சைக்காக
100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.