May 16, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஊரடங்கை நீட்டிக்க முடியாது;கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்’; ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்போது கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றினால் வைரஸ் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனவும் அது மக்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது.அதற்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை உணர்ந்து பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து மக்கள் ஒத்துழைத்தால் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கலாம். முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் இது முழுமையாக குறைந்துவிடும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா நிவாரண நிதியாக முதல்கட்டமாக ரூ.2,000 வழங்கியுள்ளதாகவும், கூடிய விரைவில் இரண்டாவது தவணையாக ரூ.2,000 நிவாரண தொகை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தமிழகத்தில் படுக்கைகள், ஒக்சிஜன் தட்டுப்பாடு என்கிற சூழல் இல்லை எனவும் கொரோனாவை வென்று விரைவில் வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.