July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“காங்கிரஸ் கொண்டு வந்த அவசர நிலையின் கருப்பு நாட்களை ஒரு போதும் மறக்க முடியாது’: பிரதமர் மோடி சாடல்

”காங்கிரஸ் கொண்டு வந்த அவசர நிலையின் கருப்பு நாட்களை ஒரு போதும் மறக்க முடியாது, ஜனநாயக நெறிமுறைகளை காங்கிரஸ் நசுக்கியது” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனை மற்றும் அறிவுறித்தலின் பேரில், அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இதன் 46 ஆம் ஆண்டு நிறைவு நாளான இன்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்போது, ‘குறித்த காலப்பகுதிகளில் அமைப்புகளின் திட்டமிட்ட அழிவை கண்டது, அவசர நிலையின் கருப்பு நாட்களை ஒரு போதும் மறக்க முடியாது’ எனவும் விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதன் மூலம் காங்கிரஸ் ஜனநாயக நெறிமுறைகளை மிதித்ததாகவும், அவசர நிலையை எதிர்த்து இந்திய ஜனநாயகத்தை பாதுகாத்த சிறந்த தலைவர்கள் அனைவரையும் இந்நாளில் நினைவில் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் ஜனநாயக உணர்வை வலுப்படுத்த தேவையான அனைத்தையும் செய்வோம் எனவும் நமது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சட்டதிட்டங்களுக்கு ஏற்ப வாழ்வோம் என அனைவரும் உறுதி ஏற்போம் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.