May 15, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘திமுகவின் வெற்றியை வீட்டில் இருந்து கொண்டாடுங்கள்’; ஸ்டாலின்

(FilePhoto)

வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்து பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வீடுகளில் இருந்து கொண்டே தேர்தல் முடிவுகளை ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்வதும் வெற்றியடைந்த செய்தியைக் கேட்டு நம் இல்லத்திலேயே மகிழ்வதும்தான் பொருத்தமான போக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நிறைவுற்று வாக்கெண்ணும் பணிகள் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

”படுக்கைகள் கிடைக்காமலும்  உயிர்வாயு கிடைக்காமலும் நோயாளிகள் அவதிப்படும் நிலையை ஊடகங்களில் பார்த்து நான் பதைபதைத்துப் போகிறேன். இந்தச் சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்தோ, சாதகமான முடிவுகள் வர வர ஒன்றுகூடியோ நம் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் நோக்கத்தில் பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கருத்துக் கணிப்புகள் திமுகவின் பக்கம் சார்பாக இருப்பதால் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு ஆதரவாளர்களுக்கும் ‘வெற்றியைக் கொண்டாடுவதை விட உடன்பிறப்பின் உயிரைப் பாதுகாப்பதுதான் என் தலையாய நோக்கம்’ என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் நம் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் யாருமே அலட்சியப் போக்கால் அவதிப்படக் கூடாது என்று மாற்றுக் கட்சித் தோழர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.