May 19, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உக்கிரமடையும் மோதல்: வட காஸா மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு! (Update)

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையிலான மோதல் 7ஆவது நாளாக தொடரும் நிலையில், இரு தரப்பினரின் தாக்குதல்களால் இதுவரையில் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பல்லாயிரக் கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், இலட்சக் கணக்கானோர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் காஸாவை முழுமையாக கைபற்றும் நோக்கில் செயற்படும் இஸ்ரேல் இராணுவத்தினர் ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் வான் வழியில் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல் இராணுவத்தினர், தற்போது தரை வழியிலும் தாக்குதல்களை முன்னெடுக்க தயாராகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், காஸாவின் வடக்கு பகுதியில் வசிக்கும் 10 லட்சம் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அந்த மக்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் தெற்கு பகுதிக்கு வெளியேற வேண்டும் என வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.