May 1, 2025 12:56:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விமானத்தில் குழந்தை பிரசவித்த ஆப்கான் பெண்: பிரசவம் பார்த்த விமானப் பணியாளர்கள்!

File Photo: Facebook/Turkish Airlines

ஆப்கானிஸ்தான் அகதிகளை பிரிட்டனுக்கு அழைத்துச் சென்ற விமானத்தில் பெண்ணொருவர் குழந்தை பிரசவித்துள்ளார்.

துபாய் நகரத்தில் இருந்து, பிரிட்டனில் இருக்கும் பர்மிங்ஹாம் நகரத்துக்கு ஆப்கான் அகதிகளை அழைத்துச் செல்கையில், 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்த போது, 26 வயதுடைய பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்ததாக விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண், தனது கணவன் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து பயணித்த மீட்பு விமானத்தின் மூலம் ஏற்கனவே துபாய் சென்றிருந்தார்.

இந்நிலையில் துபாயில் இருந்த ஆப்கான் அகதிகள் துருக்கி ஏர்லைன்ஸ் மூலம் பிரிட்டனுக்கு அழைத்துச் செல்லும் போது அந்தப் பெண்ணுக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது.

இவ்வேளையில் அந்த விமானத்தில் மருத்துவர்கள் யாரும் இருந்திருக்கவில்லை. இதனால் விமான பணியாளர்கள் சேர்ந்து, பெண்ணுக்கு பிரசவம் பார்த்தாக துருக்கி ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.

அந்தப் பெண் பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்ததாகவும், தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாகவும் விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.