October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவின் “லாங் மார்ச்-5பி” ரொக்கெட் பாகங்கள் இந்து சமுத்திரத்தில் விழுந்தன

( Photo : Twitter/AccuWeatherAstronomy)

விண்ணில் கட்டுப்பட்டை இழந்த சீனாவின் “லாங் மார்ச் – 5பி” ரொக்கெட்டின் பாகங்கள் இந்து சமூத்திரத்தில் விழுந்துள்ளன.

கட்டுப்பாட்டை இழந்து பூமியை சுற்றிக்கொண்டு இருந்த குறித்த ரொக்கட்டின் பாகம் ஏங்கே விழுமென்று தெரியாது மக்களிடையே அச்சம் ஏற்பட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்தியாவுக்கு தென்மேற்கே இந்து சமுத்திரப் பகுதியில் அதன் பாகங்கள் விழுந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரொக்கட் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும் போது அதன் பெரும்பாலான பகுதி எரிந்து அழிவடைந்துவிட்டதாகவும், சில பாகங்களே கடலில் விழுந்துள்ளதாகவும் சீனாவின் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சீனா விண்ணில் தங்களுக்கான ஆய்வு மையத்தை அமைக்கும் நோக்கில் விண்வெளி நிலையத்தின் 21 டொன் எடை உடைய முதலாவது தொகுதியை “லாங் மார்ச் 5பி” என்ற ரொக்கெட் மூலம் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் விண்ணில் ஏவியது.

இந்த விண்வெளி நிலையம் பூமிக்கு மேலே 370 கிலோ மீட்டர் உயரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த ரொக்கெட்டின் பாகம் கட்டுப்பாட்டை இழந்து பூமியை சுற்றி வருவதாகவும் அடுத்த சில நாட்களில் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழக்கூடும் எனவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

100 அடி உயரமும் 16 அடி அகலமும் உடைந்த இந்த ரொக்கெட்டின் பாகம் பூமியில் விழுந்தால் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடுமென்று அச்சம் ஏற்பட்டிருந்தது.

எனினும் அதன் பெரும்பகுதி பாகங்கள் ஆய்வாளர்களினால் கூறப்பட்டதை போன்று பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போதே எரிந்துவிட்டன. சில பாகங்களே கடலில் விழுந்துள்ளன.