June 17, 2025 14:59:46

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மியன்மாரில் தங்கியிருக்கும் அவசியமில்லாத அமெரிக்கர்களை நாடு திரும்புமாறு இராஜாங்க திணைக்களம் உத்தரவு

மியன்மாரில் தங்கியிருக்கும் அவசியமில்லாத அமெரிக்கர்களையும் அவர்களின் குடும்பத்தவர்களையும் வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டே, அமெரிக்கா இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.

ஜனநாயக ரீதியில் ஆட்சிக்கு வந்தவர்களை, ஆட்சி கவிழ்த்த இராணுவத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்ற பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் இதுவரையில் 512 பொதுமக்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளுக்கான ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் அவசியமில்லாத அமெரிக்கர்களை மியன்மாரில் தங்கியிருக்க அனுமதி வழங்கியிருந்த அமெரிக்கா, புதிதாக வெளியிட்டுள்ள வழிகாட்டல்களில் அவர்களையும் குடும்பத்தினரையும் நாடு திரும்பும்படி உத்தரவிட்டுள்ளது.