July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெனீவா விவகாரம் : ‘ஒரே புள்ளி’ என்ற விடயத்தை எழுத்துமூலம் ஆவணப்படுத்துவதற்கு இணக்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கு தெளிவான செய்தியொன்றை வழங்குவது தொடர்பில், மூன்று கட்சிகள் கூடி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா விவகாரங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி கட்சிகளுக்கிடையிலான ஆலோசனைக் குழு கூட்டம் வவுனியா, குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றது.

கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

பொறுப்புக்கூறல் தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் இதற்கு முன்னர் எத்தனையோ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.ஆனால் குறித்த விடயம் தொடர்பில் எந்தவொரு தீர்வுகளும் கிடைக்காத நிலையில், எதிர்காலத்தில் இது தொடர்பில் எவ்வாறான அணுகுமுறைகளை எடுப்பது என்பது தொடர்பாக பேசியிருந்தோம்.

கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி அந்த விடயத்தில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை வலியுறுத்தி வந்துள்ளது.

மனித உரிமைகள் விடயத்தில் பொறுப்புக்கூறல் தொடர்பாக கட்சிகள் மட்டத்தில் இருக்கக்கூடிய பலவீனத்தை முழுமையாக விளங்கிக்கொள்ளக்கூடிய அளவிற்கு ஒரு இணக்கப்பாடு வந்திருந்தது.

இதேவேளை, வடக்கு – கிழக்கைச் சேர்ந்த தமிழ் கட்சிகள், சிவில் அமைப்புகள் ஒருங்கிணைந்து சந்திக்கக்கூடிய வகையில், உறுப்புநாடுகள், மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் ஆணையாளர் ஆகியோருக்கு தெளிவான ஒரு செய்தியை வழங்கவேண்டியமை தொடர்பாகவும் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிவில் சமூகப் பிரதிநிதிகளின் அமைப்பு, விக்னேஸ்வரனுடைய அமைப்பு இணைந்து “ஒரே புள்ளி” என்ற விடயத்தை எழுத்துமூலம் ஆவணப்படுத்துவதற்கு இணங்கியுள்ளோம். மிக விரைவில் அது முன்னெடுக்கப்படும்.

இந்த இணக்கப்பாட்டினை ஒரு ஆரம்பமாக வைத்து அடுத்தகட்ட சந்திப்புகளை மேற்கொள்வதற்கு நாம் இணங்கியிருக்கிறோம் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.