
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், மூன்று மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 24 பேரும், எதிராக 21 பேரும் வாக்களித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனால் இன்று காலை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டம் 24 வாக்குகளால் நிறைவேறியுள்ளது.
மாநகர சபையில் அங்கம் வகிக்கும் 45 உறுப்பினர்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சியின் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 24 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்கள் என 21 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.