June 11, 2025 22:50:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சியால்கோட் படுகொலைகள் இரு நாடுகளின் உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது’

சியால்கோட் படுகொலைகள் இரு நாடுகளின் சுமுக உறவுகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என இலங்கை உயர்ஸ்தானிகர் மொஹான் விஜய் விக்ரம உறுதியளித்துள்ளார்.

“பாகிஸ்தானும் இலங்கையும் நட்புறவு கொண்ட நாடுகளாகவே இருக்கும். இச்சம்பவம் எமது உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என நான் உறுதியளிக்கிறேன்” என இலங்கை உயர்ஸ்தானிகர் திங்கட்கிழமை செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என குறிப்பிட்ட அவர், பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆதரவைப் பாராட்டியதோடு பாகிஸ்தான் மக்களின் அனுதாபங்களுக்கும் இரங்கலுக்கும் நன்றி தெரிவித்தார்.

“பிரியந்தவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன். பாகிஸ்தான் உடனடி நடவடிக்கை எடுத்திருப்பதை நாங்கள் பார்த்தோம்” என்று அவர் மேலும் கூறினார்.

”பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் சமூக, பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகள் உள்ளன. மேலும் இந்த சம்பவம் தற்போதுள்ள உறவை பாதிக்காது” என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பாகிஸ்தானின் பி.டி.ஐ கட்சியின் தலைவர் அர்ஷாத் தாட்,  இலங்கை உயர்ஸ்தானிகரிடம் இவ்வாறான சம்பவத்தில் மதம் பயன்படுத்தப்பட்டது வருத்தமளிப்பதாக கூறியதோடு, கட்சி சார்பில் மன்னிப்புக் கோரியுள்ளார்.