July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஆயுதம் மூலமாகவேனும் இந்திய மீனவர் ஆக்கிரமிப்பை நிறுத்துங்கள்’

இந்திய மீனவர்கள் வடக்கு,கிழக்கில் அவர்களின் ஆக்கிரமிப்பை நிகழ்த்தி கொண்டிருக்கிறார்கள்.எனவே எமது கடற்படைக்கு ஆயுதம் வழங்கியேனும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் வடக்கின் கடலை அழித்துக் கொண்டுள்ளனர்.வடக்கு,கிழக்கில் அவர்களின் ஆக்கிரமிப்பு நிகழ்ந்து கொண்டுள்ளது.நாகதீபம் பக்கம் சென்றால் இவற்றை எம்மால் அவதானிக்க முடியும்.இந்த செயற்பாடுகளை நிறுத்தியாக வேண்டும்.அதற்கான அனுமதியை எமது கடற்படைக்கு வழங்க வேண்டும்.இந்திய மீனவர்கள் எமது மீனவர்களை தாக்குவதும், மீன்பிடி உபகரணங்களை அழிக்கின்றனர் என்றால் அந்த அசம்பாவிதங்களை நிறுத்த வேண்டும் என்றார்.

நாம் சிறிய நாடு என்பதற்காக இந்தியா செய்வதையெல்லாம் எம்மால் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.பெரிய நாடுகளுக்கும் கடமைகள் உள்ளன. சிறிய நாடாகிய எமது நாட்டை பெரிய நாடுகள் அடக்காது, அவர்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாது இருக்க தெரிந்துகொள்ள வேண்டும்.ஆகவே எமது கடற்படைக்கு ஆயுதம் வழங்கியேனும் இந்த ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும் என்றார்.