
நான்கு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஆறு பேரின் உயிரை காவு கொண்ட கிண்ணியா படகுப் பாதை அனர்த்தத்தைத் தொடர்ந்து படகு பாதைகளுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.
இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் படகுகள் மற்றும் படகு பாதைகளுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கும் புதிய நிபந்தனைகளை அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்தோடு பயணிகளை ஏற்றிச் செல்லும் படகு பாதைகளை பிரதேச சபை ஊடாக மாதாந்தம் விசேட பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நெத் நியூஸிடம் தெரிவித்தார்.
திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணிப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி ‘படகுப் பாதை’ கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் கடற்படையினரால் பாதுகாப்பான முறையில் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.