May 29, 2025 14:39:56

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வரவு செலவுத் திட்டம் – 2022: நிதி அமைச்சர் இன்று சமர்ப்பிப்பார்

இலங்கை அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.

இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் மகிந்த யாப்பா அப்பவர்தன தலைமையில் கூடவுள்ளது.

இதன் பின்னர், நிதி அமைச்சர் வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.

இதனையொட்டி பாராளுமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, நவம்பர் 22 ஆம் திகதி வரை, 07 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

அதனையடுத்து, நவம்பர் 22 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

பின்னர் நவம்பர் 23 ஆம் திகதி முதல், குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளதோடு சனிக்கிழமைகள் உள்ளடங்கலாக டிசம்பர் 10 ஆம் திகதி வரை 16 நாட்கள் விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, டிசம்பர் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.