July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கைகொடுத்த சீனா கன்னத்தில் அறைகிறது”: ஐதேக

ராஜபக்‌ஷக்கள் ஆட்சிக்கு வருவதற்கு கைகொடுத்த சீனா, இப்போது அவர்களின் கன்னத்தில் அறைய ஆரம்பித்துள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கேபண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கை அரச வங்கியான மக்கள் வங்கி, சீனத் தூதரகத்தினால் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே பாலித ரங்கேபண்டார இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த அரசாங்கத்தை கொண்டுவருவதற்காக சீனாவின் ஒத்துழைப்பை வழங்கியதுடன், அதற்கு பிரதி உபகாரமாக இலங்கையில் தமக்கு தேவையான இடங்களை பெற்றுக்கொள்ள அவர்கள் நடவடிக்கையெடுத்துள்ளனர் என்று ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது சீனத் தூதரகம் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்தமையானது சீன அரசாங்கம் அல்லது சர்வதேசம், ராஜபக்‌ஷ அரசாங்கத்தை கறுப்புப் பட்டியல் சேர்ப்பதற்கு சமமானது என்றும் அவர் கூறியுள்ளார்.