May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நுவரெலியா சீதையம்மன் ஆலய புனித சின்னம் அயோத்தியில் பிரதிஷ்டை

இலங்கை நுவரெலியா – சீதா எலிய, சீதையம்மன் ஆலயத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்ட புனித சின்னம், அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ராமர் ஆலயத்தில் கையளிக்கப்பட்டது.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்தப் புனித சின்னத்தை உத்தியோகபூர்வமாக அயோத்தி ஶ்ரீ ராமர் கோயில் நிர்வாகத்தினரிடம் இன்று ஒப்படைத்தார்.

இராமாயண இதிகாசத்துடன் தொடர்புடைய  சீதா எலிய சீதையம்மன் கோவிலின் புனர்நிர்மாணப் பணிகளின் போது கண்டெடுக்கப்பட்டு புனித சின்னமாக பூஜிக்கப்பட்ட கல் ஒன்றே இவ்வாறு ஶ்ரீ ராமர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக கையளிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ஶ்ரீ ராமர் ஜென்ம பூமியின் தலைமை பூசகர் ஸ்வாமி சத்யேந்திரா தாஸு இந்த புனித சின்னத்தை பொறுப்பேற்று பூஜைகளை நடத்தினார்.

நுவரெலியா – சீதா எலிய ஆலயத்தில் நீண்ட காலமாக வைக்கப்பட்டிருந்த இந்த புனித சின்னம் 2020 ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் வௌ்ளவத்தை மயூராபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இராமாயணத்துடன் தொடர்புடைய அயோத்திக்கும், சீதை சிறை வைக்கப்பட்ட நுவரெலியா சீதா எலிய சீதையம்மன் ஆலயத்திற்கும் இடையிலான தொடர்பு இந்த புனித சின்னம் வழங்கப்பட்டதன் ஊடாக மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ராமரின் ஜனன பூமியாக அறியப்படும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திருப்பணிக்கான பூமி பூஜை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.