July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”எவரையும் காட்டிக் கொடுப்பது எங்களது நோக்கமல்ல”: மட்டக்களப்பில் டக்ளஸ்

எவரையும் காட்டிக் கொடுப்பதோ, பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை. இருப்பதை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே எமது நோக்கம் என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், 13வது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தியமைக்காக தன்னை துரோகி என்றவர்கள், இன்று அந்த சட்டத்தினை கோரி நிற்கின்றனர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராயும் வகையில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு சென்றிருந்தார்.

அதன்போது மீனவர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சருடன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

இவ்வேளையில் வாகரை பிரதேசத்தில் மீன்பிடியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துகொண்ட அமைச்சர், முக்கியமாக வாகரை பிரதேசத்தில் மீன்பிடி துறைமுகம் ஒன்றினை அமைப்பது குறித்து கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் வாகரை பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்தி இங்கிருந்து தனித்துவமான மீன் ஏற்றுமதிகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராய்துள்ளார்.
வாகரை பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவர், வாழைச்சேனை துறைமுகத்திற்கும் கண்காணிப்பு பயணத்தையும் மேற்கொண்டிருந்ததார்.