July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இழுவை வலை தடைச் சட்டத்தை கடந்த ஆட்சியில் அமுல்படுத்தாமல் இருந்தது ஏன்?: அமைச்சர் டக்ளஸ் கேள்வி!

இழுவை வலை தடைச் சட்டத்தினை உருவாக்கி, அந்தச் சட்டத்தினை அமுல்படுத்தாமல் இருந்தது ஏன்? என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பியுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியக் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற எல்லை தாண்டிய அத்துமீறிய சட்ட விரோத தொழில் முறைக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இழுவை வலை தடைச் சட்டம் பயன்படுத்தப்படாமையினாலேயே இந்திய கடற்றொழிலாளர் அதிகளவில் எல்லை தாண்டி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

குறித்த சட்டத்தினை உருவாக்கியபோது, மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்காக ஈ.பி.டி.பி. கடசியும் ஆதரவளித்திருந்தமையை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தம்மால் உருவாக்கப்பட்ட ஆட்சிக் காலத்தில் குறித்த சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவிக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்கள், தமது ஆட்சிக் காலத்தில் இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு எதிராக குறித்த சட்டத்தினை ஏன் பிரயோகிக்கவில்லை எனவும் கேள்வியெழுப்பினார்.

2017 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் இழுவை வலைச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் சுமார் 100 இற்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்ட போதிலும், அவைக்கு எதிராக இழுவை வலைத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

எனினும், தற்போது குறித்த சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் தமிழரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அவர்களின் ஆதரவாளர்களும் இணைந்து முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரை மேற்கொண்ட கடற் பயணம் தொடர்பாக தான் அலட்டிக் கொள்ளவில்லை எனவும் அது தோல்வியில் முடிவடைந்திருப்பதாகவும்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.