May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கடன் வழங்கும் போது மாகாண சபை தேர்தல் தொடர்பில் இந்தியா நிபந்தனை விதிக்கவில்லை”

இந்தியாவினால் கடன் வழங்கப்படும் போது, மாகாண சபை தேர்தல் தொடர்பில் நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியாவிடம் இருந்து கடனை பெற்றுக்கொள்ளும் போது, இந்த வருட இறுதிக்குள் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து, இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதன்போது பதிலளித்த அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இந்தியாவினால் அவ்வாறு நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பொதுவாக வெளிநாடுகள் கடனை வழங்கும் போது நிபந்தனையை விதிப்பது வழமையானதே. அதேபோன்று இந்தியாவும் நிபந்தனையை விதிக்கும். ஆனால் அது மாகாண சபைகள் தேர்தலுடன் தொடர்புடையது அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மாகாண சபைகள் தேர்தலை புதிய தேர்தல் முறையில் நடத்துவதற்கே அரசாங்கம் ஆராய்வதாகவும் இதனால் அதற்கான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கால அவகாசம் தேவை என்பதனால் இந்த வருடத்திற்குள் அந்தத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.