May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஜினி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இலங்கைக் கவிஞரின் ‘வர்ராரு வர்ராரு அண்ணாத்த’ பாடல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படத்தை வரவேற்கும் வகையில் இலங்கையை சேர்ந்த கவிஞரும் பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘வர்ராரு.. வர்ராரு அண்ணாத்த – நீ இனிமேலும் முடியாது ஏமாத்த’ என்ற பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்து மேலும் சிலருடன் பாடியுள்ள இந்தப் பாடல் ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இசை அமைப்பாளர் விஜய் ஆன்டனியின் நடிப்பில் வெளியான ‘நான்’ திரைப்படத்துக்காக எழுதிய ‘தப்பெல்லாம் தப்பேயில்லை’ என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பொத்துவில் அஸ்மின், அதன் பின்னர் பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.

இதேவேளை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது கவிஞர் அஸ்மின் எழுதிய இரங்கல் கவிதையான ‘வானே இடிந்ததம்மா’ என்ற சோகப்பாடல் உலகில் உள்ள அனைத்து தமிழ் ஊடகங்களிலும் வெளியாகி பிரபலமாகியிருந்தது.

இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தை வரவேற்கும் வகையில் ரஜினிக்கான ‘அறிமுக பாடல்’ பாணியில் ‘வர்ராரு.. வர்ராரு அண்ணாத்த – நீ இனிமேலும் முடியாது ஏமாத்த’ எனும் பாடலை கவிஞர் அஸ்மின் தற்போது யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.