July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசாங்கம் தேர்தல் முறை மாற்றத்தின் ஊடாக ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிக்கிறது’: ஜேவிபி

அரசாங்கம் தேர்தல் முறை மாற்றங்களின் ஊடாக ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜேவிபி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, மூன்றில் இரண்டு மற்றும் 20 ஆவது திருத்தம் என அனைத்து அதிகாரங்களும் கிடைத்துள்ள நிலையிலும், ஆட்சியாளர்கள் மக்களுக்காக எதனையும் செய்யவில்லை என்று ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.

அரசாங்கம் தேர்தல் முறை மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கதைத்தாலும் இப்போது மக்கள் கேட்பது அவற்றையல்ல என்று விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

“தற்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையே இப்போதைக்கு சிறந்த ஜனநாயக தேர்தல் முறையாக இருக்கின்றது. ஆனால் எமது நாட்டில் மாறுபட்ட தேர்தல் முறைகளே உள்ளன.

பாராளுமன்றம், மாகாண சபை மற்றும் உள்ராட்சிக்கென மாறுபட்ட தேர்தல் முறைகள் உள்ளன. இவை அனைத்து ஒரே தேர்தல் முறையில் இருக்க வேண்டும். ஆனால், இதற்காக கலந்துரையாடுவதில்லை.

தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரள்கின்றனர்.

இதனால் தேர்தல் முறையில் மாற்றங்களை செய்து, ஏதேனும் ஒரு விளையாட்டை விளையாடி ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முடியுமா? என்றே அரசாங்கம் சிந்திக்கின்றது”

என்று ஜேவிபி பிரசார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.