![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/10/Polish_20211007_223507625.jpg?fit=720%2C406&ssl=1)
மழைக்கு ஒதுங்குவதற்காக வீட்டுக்குள் இடமளித்தால் என்னையே வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிக்கின்றனர் என்று, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தான் வெளியேற்றப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
வீட்டின் உண்மையான உரித்தை கொண்டுள்ள உரிமையாளர் நான் என்பதால் என்னை யாராலும் வெளியேற்றிவிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து டயனா கமகே நீக்கப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சியின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே டயனா கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்சி எனது கணவரின் கட்சியே. நானும், கணவரும் இந்தக் கட்சியை கொடுத்த காரணத்தினாலேயே எதிர்கட்சியில் பலர் இங்கே வந்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
மழைக்கு ஒதுங்க வீட்டில் இடம்கொடுத்தால் வீட்டின் திறப்பையே மற்றி, என்னையே வெளியேற்ற முயற்சிக்கின்றனர். அவ்வாறு என்னை வெளியேற்றி விட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை எனது மனசாட்சிக்கு இணங்கவே அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தீர்மானங்களை எடுத்தேன். இதன்படி தொடர்ந்தும் தீர்மானம் எடுப்பேன். சஜித் போன்று நான் பொம்மையாக இருக்க மாட்டேன் என்றும் டயனா கமகே தெரிவித்துள்ளார்.