July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான உத்தரவாத வைப்புத் தொகை கட்டுப்பாடு நீக்கம்!

அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற பொருட்களின் இறக்குமதிக்காக விதிக்கப்பட்டிருந்த உத்தரவாத வைப்புத் தொகை கட்டுப்பாட்டை நீக்குவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

நாட்டில் எதிர்வரும் 6 மாதங்களுக்கான பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தை வெளியிடும் நிகழ்வில் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடனான மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக் கடிதங்களின் அத்துடன் ஏற்றுக்கொள்ளல் ஆவணங்களின் கீழ் இறக்குமதி செய்யப்படும், இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளிட்ட  623 பொருட்களுக்கு 100 சதவீத உத்தரவாத வைப்புத் தொகை கட்டாயமாக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு தொடர்பில் இறக்குமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு பிரதமர் மத்திய வங்கி ஆளுநருக்கு கோரிக்வை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று முற்பகல் மத்திய வங்கியில் நடைபெற்ற 6 மாதங்களுக்கான பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தை வெளியிடும் நிகழ்வில் உரையாற்றிய மத்திய வங்கி ஆளுநர், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான 100 வீத வைப்புத் தொகை கட்டுப்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.