July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மஸ்கெலியா- டீசைட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மஸ்கெலியா, டீசைட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத்தை சேர்ந்த 200 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று (28) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மஸ்கெலியா – டீசைட் தோட்ட நிர்வாகம் தேயிலை தோட்டங்களை காடுகளாக்கி சுத்தம் செய்ய நடவடிக்கைகளை எடுக்காது 20 கிலோவுக்கு அதிகமான தேயிலை கொழுந்தினை கொய்து தரும்படி வலியுறுத்திய வேளையில், ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் காலை 9 மணி முதல் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்று வருகிறது.

இந்த தோட்டத்தின் தேயிலைக் காணிகள் பல நல்ல தேயிலை விளைச்சலை தரக்கூடியது. ஆனால் தோட்ட நிர்வாகம் இந்த நிலங்களை சுத்தம் செய்து கொடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை.

இருந்தும் நாளொன்றுக்கு 20 கிலோவுக்கு அதிகமாக தோட்ட நிர்வாக அதிகாரி தேயிலை கொழுந்தை கொய்து தரும்படி வலியுறுத்துகிறார். இதனை கண்டித்தே தாம் போராட்டத்தை முன்னெடுத்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், 50 ஹெக்டர் வரையான தேயிலை மலைகள் காடுகளாகி மூடப்பட்டிருப்பதாகவும், ஆண் தொழிலாளர்களை நாளொன்றுக்கு 750 கிலோ புற்களை வெட்டி கொம்பஸ்ட் செய்யும் படி வலியுறுத்துவதோடு, வேறு தோட்டங்களுக்கு பணிக்கு செல்லும்படி வலியுறுத்துவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு, பெண் தொழிலாளர்கள் 20 கிலோவுக்கு குறைவாக கொழுந்து பறித்தால், கிலோவுக்கு 40 ரூபா வீதம் வழங்குவதாகவும், தொழிலாளர்களுக்கு முற்பண சம்பளம் கொடுப்பதில் இழுபறி நிலை ஏற்படுவதாகவும், தோட்ட நிர்வாகம் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் அடிமைகளைப் போல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த விடயத்தில் தொழிற்சங்கங்களும், மலையக அரசியல் தலைமைகளும் தீர்க்கமான முடிவினை பெற்றுத்தர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.