July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொவிட் தொற்று, மரணங்களில் வீழ்ச்சி!

இலங்கையில் மேலும் 66 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே 30 பெண்களும் 36 ஆண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,284 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களில் 76 வீதத்திற்கும் அதிகமானவர்கள் 60 வயதுக்கும் கூடியவர்கள் என தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, 30-59 வயதுக்கு இடைபட்ட 22.43% மானவர்களும் 30 வயதிலும் குறைந்த 1.17% வீதமானவர்களும் அடங்குகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 918 பேர் இன்று (21) இனங் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 6,927ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 60,503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை இந்த மாதம் ஆரம்ப முதல் குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்து வருகின்றது.

 

(தொற்றுநோயியல் பிரிவினால் வெளியிடப்பட்ட தினசரி கொவிட் தொற்று எண்ணிக்கையை காட்டும் வரைபு)

அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 4 இலட்சத்து 34,140 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் ஒரு மாதத்திற்கும் அதிகமான காலம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாடு கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ளது.

நாட்டு மக்களின் 50%க்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டிருந்தது.

இதன்படி, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டை மீண்டும் திறக்க அரசாங்கம் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.