July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போதைப்பொருள் கடத்தல்; ஒன்பது சந்தேக நபர்களையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் 170 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களையும் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஒன்பது சந்தேக நபர்களும் பொலிஸ் போதைப் பொருள் பணியகத்தால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் அவர்களை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு பொலிஸ் போதைப் பொருள் பணியகம் நீதிமன்றத்தை கோரியது.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் சந்தேக நபர்களை இம்மாதம் 24 ஆம் திகதி வரை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தால் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்துள்ளது.

சர்வதேச கடற்பரப்பில் இருந்து இலங்கைக்குள் வந்த வெளிநாட்டு படகொன்றில் இருந்து இந்த போதைப் பொருட்களை  கடற்படையினர் கைப்பற்றினர்.

பொலிஸாரின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கடற்படையினர் இந்த சுற்றிவளைப்பு வேட்டையை நடத்தியுள்ளனர்.