July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்தது!

இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் தினசரி எண்ணிக்கை 100 ஐ விடவும் குறைவாக பதிவாகியுள்ளது.

நாட்டில் நேற்று மேலும் 84 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே 33 பெண்களும் 51 ஆண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,022 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 1,530 பேர் இன்று (18) இனங் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 2,302 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 59,244 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 4 இலட்சத்து 31,036 ஆக உயர்வடைந்துள்ளது.

இதனிடையே இலங்கையில் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற மொத்த மக்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (17) வரை 10,968,195 ஆக பதிவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இதன்படி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50% மானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.